வாணியம்பாடி அருகே திடீர் வலிப்பு ஏற்பட்டதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து. நடத்துனரின் சாதுரியத்தால் 28 பயணிகள் உயிர் தப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து ஓசூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கிரிசமுத்திரம் அருகே வந்தபோது திடீரென பேருந்தின் ஒட்டுநர் சங்கருக்கு, உடல் சோர்வோடு வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
அப்போது அரசு பேருந்தின் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த நடத்துனர் வேலு. பேருந்தை உடனடியாக போராடி நிறுத்தினார். இருந்தபோதும் பேருந்து சாலையோரத்தில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதிய பிறகே நின்றது. நடத்துனரின் சாதுரியத்தால் 28 பயணிகள் உயிர் தப்பினர்.
இதையடுத்து மயங்கி விழுந்த ஓட்டுநரை ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்த பொதுமக்கள் அழைத்துச் சென்றனர். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.