கால்பந்தாட்ட உலகின் மகத்தான வீரர்களில் ஒருவர் பிரேசில் நாட்டின் பீலே. கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் எனவும் அவர் போற்றப்படுகிறார். அவரது 46 ஆண்டுகால சாதனையை இப்போது முறியடித்துள்ளார் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. மாடர்ன் ஃபுட்பாலின் கிரேட் என மெஸ்ஸியை சொல்லலாம்.
மெஸ்ஸி முறியடித்த சாதனை?
பீலே பிரேசிலின் சாண்டாஸ் ஃபுட்பால் கிளப்பிற்காக 1956 தொடங்கி 1974 வரை 757 ஆட்டங்களில் விளையாடிய உள்ளார். அதன் மூலம் 643 கோல்களை அந்த கிளப் அணிக்காக அவர் அடித்திருந்தார். அது தான் கடந்த சில நாட்கள் வரை ஒரே அணிக்காக தனியொரு வீரர் அடித்திருந்த அதிகபட்ச கோலாக இருந்தது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ரியல் வல்லடோலிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா கிளப்பிற்காக ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோலை அடித்தார். அதன் மூலம் ஒரே கிளப்பிற்காக விளையாடி அதிக கோல் (644) அடித்த வீரராக உருவெடுத்துள்ளார் மெஸ்ஸி.
17 சீசன்களாக 2004 முதல் 2020 – 21 வரை பார்சிலோனா அணிக்காக 749 ஆட்டங்களில் விளையாடி உள்ளார் மெஸ்ஸி. 2005 இல் அந்த அணிக்காக தனது முதல் கோலை மெஸ்ஸி பார்சிலோனாவுக்காக அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.