கேரள மாநிலம் கோட்டயத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கன்னியாஸ்திரி கொலை வழக்கில் தற்போது குற்றவாளிகள் நிரூபணமாவதற்கு முக்கிய சாட்சியாக ஒரு ‘திருடர்’ இருந்துள்ளார் என்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பணத்திற்கு மயங்காத அந்த திருடன் மனசாட்சிப்படி சாட்சியம் அளித்துள்ளதால் கேரள சமூகம் அந்த மனிதரை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.

image

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த தாமஸ், லீலா ஆகியோரது மகள் அபயா. 19 வயதாகும் அபயா கோட்டயம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவியாக இருந்தார். கன்னியாஸ்திரியான இவர் கோட்டயம் புனித பயஸ்டெந்த் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி அந்த விடுதியின் கிணற்றில் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார் கன்னியாஸ்திரி அபயா.

தலையிலும், கழுத்திலும் காயங்கள் இருந்தன. இதையடுத்து உள்ளூர் போலீஸார் மற்றும் குற்றப்புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தியதில் அபயா மரணம் தற்கொலை என வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால் அபயாவின் பெற்றோர், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணை கோரினர்.

இதையடுத்து கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை நடத்தியது. மூன்று முறை அறிக்கை சமர்ப்பித்த சிபிஐ வழக்கில் சாட்சிகள் இல்லை என கூறியது. சிபிஐ விசாரணை நடத்துவதற்கு மேல்மட்டத்தில் இருந்து பல்வேறு அழுத்தங்கள் வந்தன. அபயா கொலையை தற்கொலை வழக்காக மாற்ற முடியாது எனக்கூறிய டிஎஸ்பி வர்க்கீஸ் பி.தாமஸ், தனக்கு இன்னும் 10 ஆண்டு பணியிருந்தும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் சிபிஐ-யை விடவில்லை. சிபிஐயின் வேறு ஒரு புதிய குழுவினர் இந்த வழக்கில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2007ஆம் ஆண்டு சிபிஐயின் புதிய குழுவினர் விசாரணையை துவக்கினர். கொலை வழக்காக மாற்றப்பட்ட இந்த வழக்கில் 2008ம் ஆண்டு 302, 201 ஆகிய கொலை சாட்சிகளை அழித்தல் பிரிவுகளின் கீழ் மதபோதகர் கோட்டூர், கன்னியாஸ்திரி ஷெகி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதாவது மதபோதகர் கோட்டூருக்கும், கன்னியாஸ்திரி ஷெகிக்கும் இடையேயான திருமணத்தை மீறிய உறவை நேரில் கண்ட கன்னியாஸ்திரி அபயாவை, அவர்கள் இருவரும் சேர்ந்து கோடாரியால் தலையில் அடித்து கொலை செய்து, விடுதி கிணற்றில் வீசியதாக சிபிஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

100க்கும் மேற்பட்ட சாட்சிகள் இருந்தும், படிப்படியாக சாட்டிகள் அனைத்தும் ‘பல்டி’அடித்து கடைசியாக 49 சாட்சியங்கள் மிஞ்சின. அதில் ஒருவர்தான் அடக்கு ராஜூ. அடிப்படையில் திருடனான ராஜுவின் சாட்சியம் தான் சிபிஐக்கு பக்கபலமாக இருந்தது. அதாவது ராஜூ, அந்த கான்வெண்ட்டில் திருடச் சென்றபோது தான் கன்னியாஸ்திரி அபயா கொலையை கண்ணால் கண்டவர்.

image

இந்த வழக்கில் கண்கால் கண்ட சாட்சியான இவரையும் பல லட்சங்கள் கொடுத்து விலைக்கு வாங்க மதபோதகரும் அவர்தம் கும்பலும் எவ்வளவோ முயற்சித்தும், திருடனான ராஜு தனது மனசாட்சியை விற்க மனமில்லாமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார். இந்த ஒரு முக்கிய சாட்சிதான் அபயா கொலை வழக்கில் மதபோதகரையும், அவருடன் தவறான உறவு வைத்திருந்த ஷெகி என்ற கன்னியாதிரியையும் குற்றவாளிகளாக அடையாளம் காட்டியுள்ளது.

பணத்திற்காக திருட்டுத்தொழில் செய்து வந்த ராஜு, தனது மனசாட்சியை பணத்திற்காக விற்காமல் இந்த வழக்கில் உறுதியாக இருந்ததால் இன்று கேரளா முழுக்க தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் உயர்ந்த மனிதராக மாறியுள்ளார் இந்த ராஜூ. அன்றே அந்த கொடுமையை கண்டபோது தனது மகளுக்கு ஏற்பட்ட கொடூரமாக நினைத்ததாகவும் குற்றவாளிகள் தப்பக்கூடாது என்று அப்போதே முடிவெடுத்ததாகவும் தற்போது தனக்கும் தனது ஆன்மாவிற்கும் வெற்றி கிடைத்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அந்த உயர்ந்த மனிதர்.

அன்று முதல் திருட்டையும் கைவிட்டிருக்கிறார் இந்த ராஜு. ஊடகங்களில் துவங்கி அனைத்து தரப்பினரும் அபயா வழக்கில் திருடனாக வந்த ‘தெய்வம்’ எனபோற்றிப் புகழ்ந்து வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இருதரப்பு வாதங்கள் முடிந்தது. நேற்று அபயா கொலை வழக்கில் மதபோதகர் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி ஷெகி ஆகியோர் குற்றவாளிகள் என உறுதிப்படுத்திய திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகளுக்கான தீர்ப்ப்பை இன்று வழங்கியது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மதபோதகர், கன்னியாஸ்திரி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.