திரிபுரா மாநிலம் அகர்தலா அருகே உள்ள கெயர்பூரில் பாஜக மற்றும் சிபிஐ-எம் இடையே ஏற்பட்ட மோதல் பற்றி செய்தி சேகரிக்க முயன்ற மூன்று உள்ளூர் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்.
அகர்தலா அருகே உள்ள கெயர்பூரில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி சிபிஐ-எம் இடையே ஏற்பட்ட மோதலை பற்றிய செய்தி சேகரிக்க முயன்ற சியாந்தன் பத்ரிகாவின் பிரங்கோபால் ஆச்சார்யா, ரைசிங் திரிபுரா தொலைக்காட்சி சேனலின் பிந்து பால் மற்றும் மிருனாலினி ஈ.என்.என் டிவி சேனலின் பிஸ்வாஜித் தேப்நாத் ஆகியோர் தாக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி பிரியா மாதுரி மஜூம்தர் தெரிவித்தார். அகர்தலா பிரஸ் கிளப் இந்த சம்பவத்தை கண்டித்து, தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியுள்ளது.
கெய்ர்பூரைச் சேர்ந்த சிபிஐ-எம் மாநிலக் குழு உறுப்பினர் பபித்ரா கார் “ சிபிஐ-எம் கட்சியினர் மீது பாஜக நடத்திய தாக்குதலில் அதன் உறுப்பினர்கள் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவர் இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்” எனவும் தெரிவித்தார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நபேண்டு பட்டாச்சார்ஜி கூறுகையில் “போலீசாருக்கு முன்னால் இந்த மோதல் ஏற்பட்டது. என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்” என்று கூறினார்