இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு ஒரு வாரம் தடை விதித்துள்ளது சவுதி அரேபியா.

பிரிட்டனில் லண்டன் உள்ளிட்ட தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு நேற்றிரவு முதல் விதித்துள்ளது.

ஏற்கெனவே உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாக புதிய வகை வைரஸ் பரவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் அதிகமான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது.

image

புதிய வகை வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய நாடுகள் பலவும் பிரிட்டனுக்கான வான்வழி மற்றும் தரைவழி எல்லையை மூடிவிட்டன.

இந்நிலையில், சவுதி அரேபியாவும், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைக்கு அடுத்த ஒரு வாரத்துக்குத் தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சமீபத்தில் வந்தவர்கள், புதிய கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்த மக்கள் அனைவரும் கண்டிப்பாக இரு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சவுதி அரேபிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மீண்டும் ஒருமுறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சவுதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தரைவழி எல்லையையும் மூட சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

துருக்கி, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நேற்று இரவிலிருந்து நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.