அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தை எப்போது கூட்டுவது என்பது குறித்து முதல்வர் – துணை முதல்வர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது.
அதிமுக தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியிலிருந்து நேற்று பரப்புரையைத் தொடங்கினார்.
இந்நிலையில், அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்னும் கூட்டப்படவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. மேலும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியதும் அவசியம். எனவே, பொதுக்குழுவை எப்போது கூட்டுவது என்பது பற்றி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமையகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.