விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தனது டி.ஐ.ஜி பணியை ராஜினாமா செய்கிறார் பஞ்சாப் அதிகாரி லக்மிந்தர் சிங் ஜக்கர்.
வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் `டெல்லி சலோ’ விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இருக்கின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஏற்கெனவே பஞ்சாப் விளையாட்டு வீரர்கள் தங்கள் பதக்கங்களை திருப்பி கொடுக்க முன்வந்தனர். இப்போது அதேபோல் ஒரு முடிவை பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருக்கும் லக்மிந்தர் சிங் ஜக்கர் எடுத்திருக்கிறார்.
“நான் அடிப்படையில் ஒரு விவசாயியின் மகன். இதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். ஆனால் இப்போது போராடும் விவசாயிகளோடு நான் நிற்க வேண்டிய நேரமிது” எனக் கூறும் டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங், விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை மாநில உள்துறை செயலாளருக்கு அனுப்பி இருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “பண்ணைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் எனது விவசாயி சகோதரர்களோடு நானும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். உடனடியாக என்னை பணியில் இருந்து விடுவியுங்கள்” எனக் கூறி இருக்கிறார்.
இதனிடையே, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த லக்மிந்தர் சிங், “நான் முதலில் ஒரு விவசாயி, அதன்பின்னர் தான் ஒரு போலீஸ் அதிகாரி. எனக்கு இன்று எந்த பதவி கிடைத்தாலும், அதற்கு காரணம் எனது தந்தை வயல்களில் விவசாயியாக பணியாற்றி என்னை படிக்க வைத்ததனால்தான். எனவே, விவசாயத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
டெல்லியில் அமைதியாக பல நாட்களாக விவசாயிகள் தங்களின் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் குரல்களை யாரும் கேட்கவில்லை. நான் ஒழுங்குமிக்க ஒரு பணியில் இருக்கிறேன். இந்தப் பணியில் இருக்கும் விதிப்படி நான் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்க முடியாது. கலந்துகொள்ள முடியாது. இதனால் தான் முதலில் எனது பணி தொடர்பான முடிவை எடுக்க இருக்கிறேன்.
தற்போது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். வழக்கமாக இது போன்று முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டும் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே நான் அரசுக்கு நோட்டீஸ் தரவேண்டும். உடனடியாக பதவி விலக வேண்டும் என்றால் அந்த 3 மாத ஊதியத்தை நான் அரசுக்கு திருப்பித் தரவேண்டும். இப்போது நான் உடனடியாக என்னை விடுவிக்க சொல்லி இருக்கிறேன். இதனால் அந்த 3 மாத ஊதியத்தை அரசுக்கு திருப்பிச் செலுத்த தயாராக இருக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
பஞ்சாப்: கர்ப்பப்பையில் டவலை வைத்து தைத்த மருத்துவர்கள்… உறவினர்கள் அதிர்ச்சி!
32 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையில் பணியாற்றிய லக்மிந்தர் சிங், 81 வயதான தனது தாயுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த ராஜினாமா முடிவை எடுத்து அதற்கான கடிதத்தை மாநில உள்துறை செயலாளருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ளார்.