உலகமே உற்றுநோக்கியிருந்த அமெரிக்கா அதிபர் தேர்தல் கடந்த டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலர் தங்கள் வாக்குகளை தேர்தல் நாளுக்கு முன்னரே தபால் மூலம் செலுத்தினர். இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான வாக்குகள் இம்முறை பதிவானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

அதிகப்படியான தபால் வாக்குகள் பதிவாகியிருந்ததால், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கிய நாள் முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடனே முன்னிலை வகித்து வந்தார். அதனால், ஜோ பைடனே அமெரிக்க அடுத்த அதிபர் என அந்நாட்டு அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர். அதுபோலவே, பெரும்பான்மையை வாக்குகளைப் பெற்ற ஜோ பைடன்தான் அடுத்த அதிபர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனை ஜோ பைடன் ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடித் தீர்த்தனர்.

வாஷிங்டன் போராட்டம்

இருப்பினும், ஜோ பைடன் வெற்றிபெற்றதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால், ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுத்து தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி பல்வேறு மாகாணங்களின் நீதிமன்றகங்ளில் வழக்குகளைத் தொடர்ந்தார். இதன் தொடர்ச்சியாக, ட்ரம்ப் தர்ப்பினர் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தனர்.

தற்போது, அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிருந்தும் வெற்றியாளர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் விதிமுறைகளின்படி, அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் அமெரிக்க அதிபர் தேர்வாணையக் குழுவில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தேர்வாணையக் குழுவின் முடிவுகளானது இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், ட்ரம்ப் தரப்பினர் நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் போதிய ஆதராரங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டன.

Also Read: `ஜோ பைடன் வெற்றி, அநீதி; இறுதி முடிவு வரட்டும்!’- பழைய பல்லவியைத் திரும்பப் பாடும் ட்ரம்ப்

இதனால் மிகவும் ஆவேசமடைந்த ட்ரம்ப் தரப்பினர் நேற்று அமெரிக்காவின் சாலைகளில் இறங்கி `அடுத்த நான்காண்டுகளும் ட்ரம்ப் ஆட்சியே தொடரும். எங்களுக்கு ஜோ பைடன் அதிபராக வேண்டாம். வாக்குகளைத் திருடாதீர்கள்!’ என்று கோஷமிட்டவாறு பேரணியாகச் சென்றனர். இந்நிலையில், அங்கு திரண்டு வந்த ஜோ பைடன் ஆதரவாளர்கள் ட்ரம்ப்புக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

வாஷிங்டன்

வாஷிங்டனின் ஒலம்பியா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 27 வயதான ட்ரம்ப் ஆதரவாளர் ஒருவர், ஜோ பைடன் தரப்பைச் சேர்ந்த மற்றொருவர் மீது துப்பாகிச்சூடு நிகழ்த்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் துப்பாகிச்சூடு நடத்திய இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட நபர் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இதுதவிர வாஷிங்டன் மோதலில், 4 பேர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் வெளியாகியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை போலீஸார் மீட்டு வருகின்றனர். வாஷிங்டன் மட்டுமல்லாது ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றன.

அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் வரும் ஜனவரி 20-ம் தேதி பதவியேற்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.