தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் நிலையில், ‘துளிர்க்கும் நம்பிக்கை’ என்ற தலைப்பில் புதிய தலைமுறை மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறியாள்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தியாகராயர் குழும தலைவர் கருமுத்துக்கண்ணன், ZOHO சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு, KISSFLOW சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம், பிஜிபி குழுமத் தலைவர் பழனி ஜி.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் விழா காலங்களில் தொற்று அதிகரிக்காமல் கட்டுக்குள் உள்ளது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும், “மாநிலத்தின் பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில்கூட இந்தியாவிலேயே அதிகப்படியான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.