திருமலை திருப்பதி ஏழுமலையானை அனைத்து வயதினரும் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம், நவராத்திரி விழா ஆகியவை கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றன. அப்போது, கொரோனா விதிகள் காரணமாக 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், முதியவர்களும் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா 10 நாட்களுக்கு கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி குழந்தைகளையும் அனுமதிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, அனைத்து வயதினரையும் ஏழுமலையானை தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரம், முதியவர்கள் தங்களது உடல்நிலையை கருத்தில் கொண்டு திருப்பதி வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.