சென்னை சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதியின் மரணத்தில், சந்தேகம் இருப்பதாகக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள அன்னை சத்தியா நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கம். கடந்த திங்களன்று நடத்திய வாகன சோதனையில், நீலகண்டன் என்பருடன் சேர்ந்து 8 கிலோ கஞ்சாவுடன் சிக்கியதாக ஐஸ் அவுஸ் காவல்துறையினர் இவரை கைது செய்தனர். நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாலிங்கம், திடீரென நேற்று காலை இறந்துவிட்டதாக காவல்துறையினர் அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மகாலிங்கம் நீதிமன்ற காவலில் இறந்தது தொடர்பாக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். இதனிடையே தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், காவல்துறை தாக்கியதாலே அவர் இறந்துள்ளதாக மகாலிங்கத்தின் மனைவி பிரபா குற்றம்சாட்டியுள்ளார்.
உயிரிழந்த மகாலிங்கம் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்றும், சிறுநீரக பாதிப்பு உடையவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாததால், வாந்தி, வயிற்றுப் போக்கால் மயக்கமடைந்து இறந்துவிட்டதாக மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் கூறியுள்ளனர். அதேசமயம் தனது கணவர் ஆரோக்கியமாகவே இருந்ததாகவும், போலீசார் தாக்கியதாலேயே அவர் இறந்துவிட்டதாகவும் பிரபா குற்றம்சாட்டுகிறார்.
மகாலிங்கம் மரணத்தில் மர்மம் விலகும் வரை உடலை வாங்க மாட்டேன் என தனது 3 குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் பிரபா. பிரேத பரிசோதனை முடிவு வந்தால்தான், விசாரணைக் கைதியின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.