இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் 51-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பெருமையை செஸ் விளையாட்டின் மூலம் பரப்பியவர். அவர் செஸ் உலகில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.
1969-ஆம் ஆண்டு டிசம்பர் 11-இல் மயிலாடுதுறையில் பிறந்தார். ஆனந்தின் தாயார் சுசீலா செஸ் வீராங்கனை. அதனால்தான் ஆனந்துக்கும் செஸ் விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. ஆனந்த் தன்னுடைய 6 வயதிலிருந்தே செஸ் விளையாடத் தொடங்கினார். ஆனந்த் தொடர்ந்து செஸ் விளையாடியதற்கு அவரது தாயாரின் நண்பர் தீபா ராமகிருஷ்ணன் என்பவரும் காரணம்.
1988 இல் விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். இந்தியாவில் அதற்கு முன் யாரும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றதில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்த அவர் 2006-இல் செஸ் விளையாட்டுக்கான எலோ ரேட்டிங்கில் 2800 புள்ளிகளை கடந்தார். வெகு சிலரே அதை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். செஸ் தரவரிசையில் தொடர்ந்து 21 மாதங்கள் முதல் இடத்தில் இருந்தார் ஆனந்த்.
ரேபிட் வகை செஸ் போட்டிகளில்தான் துவக்கம் முதலே அவருக்கு ஆர்வம் அதிகம். அந்த வகை செஸ் தொடர்களில் பல்வேறு பட்டங்களை வென்று குவித்துள்ளார். செஸ் சாம்பியன்ஷிப் தொடர்களை டோர்னமென்ட் முறையிலும், நாக்-அவுட் முறையிலும், ரேபிட் முறையிலும் வென்ற ஒரே வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே. 1992இல் இந்தியாவில் முதன் முறையாக சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து 2007இல் இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதையும் பெற்று இருக்கிறார். ஆனந்த் தமிழை தவிர ஆங்கிலம், பிரென்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். ஆனந்து செஸ் தவிர கிரிக்கெட் போட்டிகளையும் மிகவும் விரும்பி பார்ப்பார். எப்போதும் ஆனந்துக்கு விருப்பமான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இப்போதும் ஆனந்த் பல செஸ் சாம்பியன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். மேலும் பல சாம்பியன் பட்டங்களை வெல்ல வாழ்த்துகள் ஆனந்த்.