டெல்லி புராரியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், மத்திய அரசு வழங்கும் தங்குமிடத்தை பயன்படுத்த மறுத்துவிட்டனர்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி டெல்லியின் எல்லைப் பகுதியிலும், புராரியில் உள்ள நிராங்காரி மைதானத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுங்குளிரில் இருந்து விவசாயிகளை காக்கும் வகையில், புராரி போராட்டக் களத்தில் மத்திய அரசு தங்குமிட வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அந்த வசதிகளை பயன்படுத்தப் போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வெறும் வாக்குக்காக மட்டுமே இருப்பிடங்களை அரசு அமைத்துக் கொடுத்திருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வசதிகளை விவசாயிகள் புறக்கணித்திருப்பதால், மத்திய அரசு அமைத்த தங்குமிடங்கள் ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.