சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்தியவாணி நகரில், கூவம் ஆற்றங்கரை ஓரம் உள்ள வீடுகளை ஆக்கிரமிப்பில் இருப்பதாகச் சொல்லி காலி செய்ய பொதுப்பணித் துறை சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
அங்கு வசித்து வந்தவர்களுக்கு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சத்தியவாணி நகரில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டனர்.
பெரும்பாலானோர் வீடுகளை காலிசெய்து பெரும்பாக்கம் சென்றிருந்த நிலையில், அந்த பகுதியிலிருந்த 350 குடும்பங்கள் மட்டும் குழந்தைகளின் கல்வி, வேலை மற்றும் கொரோனா பேரிடர் போன்ற காரணங்களுக்காக காலிசெய்யாமல் இருந்து வந்தார்கள்.
பொதுப்பணித்துறை சார்பில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில். இன்று அந்த வீடுகளை இடிக்க அரசுத்தரப்பு அங்குச் சென்றது. அப்போது தங்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து. அருகில் உள்ள கூவம் ஆற்றில் இறங்கி இருபதுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு, மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஆற்றில் இறங்கியவர்கள் இரண்டு நேரத்துக்கும் மேலாக வெளியில் வரவில்லை.அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் அதோடு, தீயணைப்பு துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.