மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் நாகரீகத்துடன் பேச வேண்டும். ஜெயலலிதாவைப் பற்றி பேச ‘ஊழலின் ஊற்றுக்கண்களான’ இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாகரீக அரசியலுக்கு திமுகவுக்கும் எந்த காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை என்பதை  மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் கடந்த சில நாட்களாக நிரூபித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைத்த பல ஊழல்களின் ஊற்றுக்கண்ணான, ஊழலின் பிதாமகரான கருணாநிதியின் வாரிசுகள், அவர்களைப் பற்றி உலகமே அறிந்த சங்கதிகளை வீராவேசமாக பேசுவதால் மட்டுமே மறைத்துவிட முடியும் என நினைக்கிறார்கள். அவர்களுடைய கட்சிக்காரர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுக்க வாழ்கிற ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் 2ஜி ஊழல் மூலம் பெரும் தலைகுனிவை, அவமானத்தை ஏற்படுத்திய இந்த விஞ்ஞான ஊழல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக தமிழகத்திற்கு செய்த தீமைகள் கொஞ்சமா, நஞ்சமா?

ஒவ்வொரு காலத்திலும் தாங்கள் புரிந்த ஊழல்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தமிழகத்தின் உரிமைகளை, தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காவு கொடுக்க இந்த கருணாநிதி கூட்டம் தானே? சர்க்காரியாவில் இருந்து தப்பிக்க கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது யார்? தோல்வியிலிருந்து தப்பிக்க லட்சோபலட்சம் தமிழ் சொந்தங்களை இலங்கையில் கொன்றொழிக்க துணை நின்றது யார்? இப்படி ஊழல், நயவஞ்சகம் இவற்றின் மொத்த வடிவங்களான இவர்களுக்கு, தமிழக மக்களுக்காக தவ வாழ்க்கை வாழ்ந்து, இன்றும் அவர்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கிற புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

தேர்தல் ஜுரம் ஆரம்பித்து விட்டதால் இனி திரு. ஸ்டாலின், கைத்தடிகள் தூண்டிவிட்டு இப்படியெல்லாம் பேச வைப்பார். அம்மா அவர்களை கொச்சைப்படுத்தும் இந்த உலக மகா யோக்கிய சிகாமணிகள், அவர்களின் மரணத்தைப் பற்றியும் வழக்கம்போல ‘ரொம்பவும் அக்கறை உள்ளவர்கள்’ போன்று அவதூறு பரப்பி குளிர்காய நினைப்பார்கள் இவர்களின் மலிவான பிதற்றல்களை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.

இதுபோன்று வரம்பு மீறி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாலும், அதிகாரத்தில் இருக்கும்போது போட்ட ஆட்டங்களாலும்தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் தீய சக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது அம்மா அவர்கள் இல்லை என்பதால் இப்போதே ஆட்சியைப் பிடித்து விட்டதாக நினைத்து கற்பனையில் ராஜ்ஜியத்தில் மிதக்கும் இவர்களின் கனவு ஒருநாளும் பலிக்கப் போவதில்லை.

அதிர்ஷ்டத்தால் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு, நாளைக்கு அடையாளம் இல்லாமல் போகப் போகிறார்கள் வேண்டுமானால் இவர்களின் எக்காளத்தையும், இழிசொற்களையும் கண்டும் காணாமல் இருக்கலாம். எனெனின் அம்மாவை அசிங்கப்படுத்தும் இந்த தீய சக்திகளோடு 60:40 ஒப்பந்தம் போட்டு செயல்படுபவர்கள்,  ‘நீ அடிப்பதுபோல அடி: நான் அழுவது போல அழுகிறேன்” என்று பேசி வைத்துக் கொண்டே இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

ஆனால் தீய சக்தி கூட்டத்திற்கு சிம்மசொப்பனமான  அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உண்மையான பிள்ளைகளான அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களாகிய நாங்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அதனால் திரு ஸ்டாலினும், திரு.ராசா போன்றவர்களும் பேசுவதற்கு முன் யோசித்து நாகரீகமாக பேசுவது நல்லது என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.