ஆன்லைன் டிக்கெட்டில் மாலை 4.30 என ரயிலின் நேரத்தை குறிப்பிட்டு மதியம் 2.30 மணிக்கே நெல்லையில் இருந்து நாகர்கோவில் இண்டர்சிட்டி ரயில் சென்றதால் முன்பதிவு செய்த மக்கள் பலர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
நாகர்கோவில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பலர் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நெல்லையில் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் டிக்கெட்டில் ரயிலின் நேரம் இன்று மாலை 4.30 மணிக்கு நெல்லை சந்திப்பில் இருந்து கிளம்புவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இன்று நாகர்கோவில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது மதியம் 2.30 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பி உள்ளது. இதனை அறியாத பலர் 4.30 மணி என நினைத்து வந்துள்ளனர். பின்னர் ரயில் சென்றதை அறிந்த பலரும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
திருவேற்காடு: திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்பொழுது, ’’ரயிலின் நேரம் 4.30 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வந்து கேட்டால் 2.30 க்கு சென்றுவிட்டதாக சொல்கின்றனர். எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கவில்லை; மாற்று ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதற்கும் ஒவ்வொரு அதிகாரியாக சென்று பாருங்கள் என்று அலைக்கழிக்கின்றனர். என்னைப்போன்று 30க்கும் மேற்பட்டோர் இன்று ஏமாந்து திரும்பி சென்றனர். வயதான முதியவர்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறோம்’’ என கவலையுடன் தெரிவித்தார். மேலும் நேரடியாக வந்து பதிவுசெய்த டிக்கெட்டிலும் ரயிலின் நேரத்தை குறிப்பிடவில்லை. பேருந்திற்கு கட்டணம் கொடுத்து செல்லமுடியாத சூழலில்தான் ரயிலில் பயணம் செய்கிறோம். இதனால் பாமர மக்களாகிய நாங்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறோம் என்றும் பலர் புகார் கூறினர்.
இதுகுறித்து ரயில்வே மேலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, கொரோனா காலத்திற்குபின் அனைத்து ரயில்களும் சிறப்பு ரயில்களாகவே செல்கின்றது. ரயிலின் நேரம் 1ஆம் தேதியில் இருந்து மாற்றப்பட்டு உள்ளது. இதனை செய்தித்தாள்களில் பார்த்துதான் மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களுக்கு குறுஞ்செய்தி எதுவும் அனுப்பப்பட மாட்டது என தெரிவித்தார். மேலும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பது தொடர்பாக கேட்டபோது, அவர்கள் கட்டிய தொகை திருப்பி வழங்க முடியாது; மற்ற ரயில்களிலும் மக்கள் பதிவு செய்து செல்வதால் மாற்று ஏற்பாடுகள் செய்ய இயலாது என தெரிவித்தார்.