வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுக்கும் எனவும், இது இலங்கையில் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது கன்னியாகுமரியில் இருந்து 1,040 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கூறியுள்ளது. தொடர்ந்து வரும் 24 மணி நேரத்தில் அது புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என பெயரிடப்பட்டுள்ளது.
நாளை மாலை அல்லது இரவில் இலங்கை திரிகோணமலைக்கு அருகே கரையை கடக்கும் என்றும், 3-ஆம் தேதி மேற்கு நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி கடல் பகுதிக்கு வரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.