வழக்கமான 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4-ல் கூடுதல் போட்டியாளர்களாக முதலில் அர்ச்சனா செல்ல அவரை அடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார் மிர்ச்சி சுசித்ரா.
அதற்கு முன்னதாக க்வாரன்டீனில் சுச்சி இருந்தபோதே அவரைத் தொடர்புபடுத்தி சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம். தங்கியிருந்த ஹோட்டலில், நள்ளிரவில் யாரோ சிலர் தன்னைக் கொல்ல முயல்வதாகக் கதறிப் பரபரப்பைக் கூட்ட, அப்போதே சேனல் தரப்பில் ‘இவரை ஷோவுக்குள் அனுப்புவதா வேண்டாமா’ என யோசித்ததாகத் தகவல்கள் கசிந்தன. ஆனாலும் திட்டமிட்ட நாளிலிருந்து சில நாட்கள் தாமதமாக அவரை அந்த வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்கள்.
பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் அவர் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டது போல் தெரியவில்லை. பாலாவுக்கு ஆதரவாகவே மட்டுமே செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையில் ஆஃப் தி ஸ்க்ரீனில் பிக்பாஸை ரொம்பவே படுத்தி எடுத்துவிட்டார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். க்வாரன்டீனில் இருந்தபோது நடந்த மாதிரியே பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் சில நேரம் அழுவது, ஆர்ப்பாட்டம் பண்ணுவது, அது வேண்டும் இது வேண்டுமெனக் கேட்பது என்கிற ரீதியிலேயே இருந்தாராம். ரிலாக்ஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையிலேயே அவர் தொடர்ந்து நேரம் செலவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சேனல் தரப்பிலேயே கடுப்பாகி ’இவர் வெளியேறினால் போதும்’ என்கிற மனப்பான்மைக்கு வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் ரியோ, பாலா, ஆரி, சோம், அனிதா ஆகியோருடன் சுச்சியும் இடம்பிடித்திருந்தார். இவர்களில் சுச்சிக்கே மிகக் குறைவான ஓட்டுகள் கிடைத்ததாகவும் எனவே அவர் ஷோவிலிருந்து வெளியேறி விட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுச்சி வெளியேறிய எபிசோடின் ஷூட்டிங் இன்று மாலை நடந்தது. நாளை இரவு அது ஒளிபரப்பாக உள்ளது.