அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக ஜோ பைடன் பொய்யாக கூறிக் கொள்கிறார் என ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜோ பைடனுக்கு சாதகமாக முடிவுகள் வெளியான நிலையில், ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜோ பைடன் வெற்றியாளராக பொய்யாக காட்டிக் கொள்வதை மக்கள் அனைவரும் அறிவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால், உண்மை என்னவென்றால், இந்தத் தேர்தல் முடிவடைவதற்கான காலம் வெகு தொலைவில் உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஜோ பைடனை வெற்றியாளர் என எந்தவொரு மாநிலமும் அறிவித்து சான்றிதழ் வழங்கவில்லை என்றும், கடும் போட்டி நிலவியதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட மாநிலங்களில் முடிவுகள் வரவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவதையும், சரியான வெற்றியாளரை தேர்வு செய்வது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் நாளை சட்டநடவடிக்கையை தொடங்கவிருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வாக்குகள் நேர்மையாக எண்ணப்படும் வரை ஓயமாட்டேன் என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.