`பாரம்பர்ய வைத்திய முறைகளை வளர்த்தெடுக்க மத்திய அரசு என்ன செய்திருக்கிறது?’ எனத் தமிழக வழக்கறிஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இந்தியில் பதில் அனுப்பிவைத்திருக்கிறார்கள் ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள்.`ஆங்கிலத்தில் பதில் தராமல், இந்தி மொழியில் பதில் அனுப்பியது ஆட்சி மொழித் திருத்தச் சட்டத்துக்கு விரோதமானது. நேரு கொடுத்த உறுதிமொழியைப் பா.ஜ.க. அரசு உதாசீனப்படுத்துகிறது’ எனக் கொதிக்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி.

ஆயுர்வேதம்

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இந்தி தொடர்பான சர்ச்சைகள் வேகமெடுத்துவருகின்றன. சென்னை விமான நிலைய சி.ஆர்.பி.எஃப் பெண் காவலர் ஒருவர், `இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?’ எனக் கனிமொழி எம்.பி-யிடம் கேட்ட சம்பவம், பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனக் குரல் எழுப்பினர்.

இதன் தொடர்ச்சியாக, `இந்தி தெரியாது போடா…’ என்ற வாசகம் டிரெண்டானது. அதேபோல், சென்னை ஜி.எஸ்.டி ஆணையத்தில் உதவி ஆணையாளராக இருக்கும் பாலமுருகன் என்பவருக்கு, இந்திப் பிரிவில் பணியிடம் ஒதுக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. `இந்தி மொழியே தெரியாத எனக்கு இந்திப் பிரிவில் பணி ஒதுக்கியது நியாயமில்லை’ எனக் கூறி டெல்லியிலுள்ள ஜி.எஸ்.டி தலைமையத்துக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, இந்திப் பிரிவிலிருந்து வேறொரு பிரிவுக்கு மாற்றப்பட்டார் பாலமுருகன்.

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி ஆயுஷ் அமைச்சகம் நடத்திய பயிற்சி முகாமில் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை யோகா மருத்துவம் படித்த மருத்துவர்கள் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி முகாமை முழுக்க இந்தியிலேயே நடத்தினார்கள். இது தொடர்பாக, தமிழக மருத்துவர் சௌந்தர பாண்டியன் கேள்வி எழுப்பியபோது, அவரை ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்யா ராஜேஷ் அச்சுறுத்தியதாகத் தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சென்னை வழக்கறிஞர் குமாரதேவன் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதிலளித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது ஆயுஷ் அமைச்சகம்.

வழக்கறிஞர் குமாரதேவன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் கடந்த 26.8.2020 அன்று ஆர்.டி.ஐ மூலம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார் குமாரதேவன். அதில், ` ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற பாரம்பர்ய மருத்துவ முறைகளுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது? இந்தியாவில் எங்கெல்லாம் சித்தா மையம் அமைந்திருக்கிறது? அதேபோல், யுனானி, ஆயுர்வேதத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? அதற்கான மையங்கள் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்ட தொகை, மாநிலவாரியாக ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவு… போன்ற விவரங்களைக் கேட்டிருந்தார். இதற்கு முழுவதும் இந்தியிலேயே பதிலளித்திருக்கிறது ஆயுஷ் அமைச்சகம்.

Also Read: இந்தி எதிர்ப்பு: `அன்று தியாகம் இருந்தது, இன்று!’ – பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்.

ஆயுஷ் அமைச்சகத்தின் செயல் குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ` மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன், இந்தி பேசாத மக்கள்மீது இந்தியைத் திணிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்துவருவதும், அதை எதிர்த்து தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் ஒலிப்பதும் தொடர்கதையாகிவருகிறது. அண்மையில் புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தியைத் திணிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த முயற்சியிலிருந்து மத்திய பா.ஜ.க அரசு பின்வாங்கியது. அதேபோல விவசாயிகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில விவரங்களைக் கேட்டபோது, அதற்கான பதில்கள் இந்தியில்தான் அனுப்பப்பட்டுள்ளன. இத்தகைய போக்கு தொடர்ந்து நடந்துவருகிறது.

இந்தியில் அனுப்பப்பட்ட கடிதம்

சென்னை வழக்கறிஞர் குமாரதேவன் கேட்ட கேள்விகளுக்கு, இந்தியில் பதில் அனுப்பப்பட்டிருக்கிறது. அதை ஆங்கிலத்தில் புரிந்துகொண்டு அஞ்சல் ஊழியர் வழக்கறிஞர் குமாரதேவனிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்தியில் எழுதப்பட்ட இந்தக் கடிதப் போக்குவரத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: `இந்தி தெரியாது போடா’, `தமிழ் எங்கள் வேலன்; இந்தி நம்ம தோழன்’ – டி-ஷர்ட் அரசியல் பின்னணி!

இந்தி பேசாத மக்களுக்கு 24.4.1963-ல் பிரதமர் நேரு, `ஆங்கிலம் துணை மொழியாகவும், மாற்று மொழியாகவும் மக்கள் விரும்பும்வரை தொடர்ந்து இருக்கும். அதைத் தீர்மானிக்கும் பொறுப்பை இந்தி மொழி அறிந்த மக்களிடம் விடாமல், இந்தி மொழி அறியாத மக்களிடமே விடுவேன்’ என்று உறுதிமொழி வழங்கினார். நேரு கொடுத்த உறுதிமொழியை பா.ஜ.க அரசு உதாசீனப்படுத்தி, அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டிருக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியில் அனுப்பப்பட்ட கடிதம்

வழக்கறிஞர் குமாரதேவனிடம் பேசினோம். “ நான் ஆங்கிலத்தில் அனுப்பிய கடிதத்துக்கு, இந்தியில் பதில் வந்திருக்கிறது. இதை இந்தித் திணிப்பாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு (5.11.2020) ஹரியானாவில் இருந்து வந்த தகவல் உரிமைச் சட்டம் தொடர்பான கடிதமும், இந்தியிலேயே அனுப்பப்பட்டிருக்கிறது. நான் கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில் அனுப்பியிருக்கிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, ஆங்கிலத்தில் அனுப்புமாறு சுகாதாரத்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறேன். என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்” என்றார் ஆதங்கத்துடன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.