டெல்லி குருகிராம் நகரத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 21 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது பெண்மணிக்கு கடந்த 21 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், அவரது பெற்றோர் அவரை அன்றைய தினமே குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பெண்ணின் உடல்நிலை மோசமாகி, சுய நினைவு இழந்ததால் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை தனது தந்தையை அழைத்தப் பெண்மணி தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட நபரைக் கண்டறிந்த காவல்துறையினர் அவரை இன்னும் வரை கைது செய்யவில்லை.
இது குறித்து காவல் அதிகாரி குண்டு கூறும் போது “பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்மணி அவரது தந்தையிடம் விகாஸ் எனற பெயரை கூறியுள்ளார். அந்தப் பெயரை வைத்துதான் நாங்கள் குற்றவாளியை கண்டறிந்தோம். அங்கு நிறுவப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனைக்கு உட்படுத்தி விசாரணை நடத்தியதில் அவர் மருத்துவமனையில் பணிபுரிபவர் இல்லை என்பதும், அந்த நபர் வெளிநபர் என்பதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் தொடர்பான விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட உடன் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறினார்.
இது குறித்து பெண்மணியின் தந்தைக் கூறும் போது “ ஒரு பெண்ணை எப்படி ஆண் மருத்துவர் கையாள முடியும். எனது மகள் மருத்துவமனையிலே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுதான் மருத்துவமனை நோயாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிற விதமா” என்று கூறியுள்ளார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும் போது “ பெண்மணி அக் 21 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் அவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட ஆறாவது நாளில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு மருத்துவமனை முழுமையாக ஒத்துழைக்கும்” என்று கூறினர்.