பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பொன்பத்தி ஏரி. பறவைகளை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எல்லைக்குட்பட்ட பொன்பத்தி ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு கடந்த சில நாட்களாக பறவை இனங்கள் அதிக அளவு வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த கனமழையால் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததாலும், பாசனத்திற்கு நீர் திறக்கப்படாததால் ஏரியில் நீர் அதிகளவு தேங்கியுள்ளது. இதனால் கருவேல மரங்கள் அதிக அளவு நீரில் உள்ளதால் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக பொன்பத்தி ஏரிப்பகுதி உள்ளது.
கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும் பறவைகள் காலை வேளையில் பல்வேறு இடங்களுக்குச் சென்று இறைதேடிய பிறகு மாலையில் ஓய்வெடுக்க ஏரியை தேடி வருவது அனைவரையும் ரசிக்கவைத்துள்ளது
பறந்து வரும் பறவைகள் ஆயிரக்கணக்கில் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால் மாலை நேரத்தில் ஏரிப் பகுதி முழுவதும் பறவைகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது. இதனால் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பறவைகளை பார்வையிட ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
பறவைகளை சரணாலயங்களில் மட்டுமே கூட்டமாக காணமுடியும். இந்நிலையில் உள்நாட்டு பறவைகள் அதிக அளவு ஒரே இடத்தில் காணப்படுவதால் செஞ்சி பகுதியில் புதிய பறவைகள் சரணாலயம் உருவாவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசு இப்பறவை இனங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.