மயானத்திற்கு பிரேதத்தை தூக்கிச் செல்ல வழி இல்லாததால் வயல்வெளியில் தூக்கிச் சென்ற அவலம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் பாரதி நகரில் அமைந்துள்ள அருந்ததியர் காலனிக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அவர்களுக்கு சொந்தமான மயானம் அமைந்து உள்ளது. அந்த மயானத்திற்கு செல்வதற்கு இவர்களுக்கு போதிய பாதை வசதி இல்லை, இதற்காக இவர்கள் கடந்த 50 வருடங்களாக அரசுடன் பாதை கேட்டு போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நேற்று காலை வீடு இடிந்து அதனுடைய கற்கள் தலையில் விழுந்து கதிரவன் என்ற 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார் . அவனுடைய பிரேதத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து இன்று அவரது குடும்பத்திற்கு வழங்கினார்கள் .
அந்த பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு மயானத்திற்கு செல்வதற்கு பாதையே இல்லாததால் மயான பாதை கேட்டு பாரதிநகர் அருந்ததிய சமூக மக்கள் இன்று நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் சாலை மறியல் செய்து பாதை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அங்கு வந்த வருவாய் துறையினரும் காவல்துறையினரும் இவர்கள் கேட்கும் பாதை மற்றவர்களுக்கு சொந்தமாக பட்டா இடமாக இருப்பதால் இதில் தீர்வு கிடைப்பது சிக்கல்கள் உள்ளது, அரசிடம் முறையாக பேசி இதற்குத் தீர்வு செய்வதாக சொல்லியுள்ளனர்.
பிறகு அந்த பிரேதத்தை எடுத்துச் செல்ல பாதையில்லாததால் நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களின் வழியாக தூக்கிச் சென்றனர் அப்போது சேற்றில் சிலர் வழுக்கி விழுந்து அவர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது 50 வருடங்களாக மயான பாதை கேட்டு போராடி வரும் இவர்களுக்கு அரசு தலையிட்டு உடனடியாக மயான பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே இவருடைய கோரிக்கையாக உள்ளது.