ஓமலூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக தலைமைக் காவலரின் மனைவி அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கணவாய்புதூர் ஊராட்சியில் பிரகாசம் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர், மத்திகிரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலைசெய்து வருகிறார். இவருக்கு செங்கொடி என்ற மனைவியும் கிஷோர், மைத்ரேயன்ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்தநிலையில், சின்னதுரையின் மனைவி செங்கொடி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை தவிக்க விட்டு திருமணத்தை மீறிய உறவு காரணமாக வேறொரு நபருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. சின்னதுரை பணி நிமித்தமாக மத்திகிரி பகுதியில் இருப்பதால் குழந்தைகள் இருவரையும், சின்னதுரையின் அக்கா கவனித்து வந்தார்.

image

மேலும், குழந்தைகளின் படிப்பு பாதிக்காமல் இருக்க சேலத்தில் இருந்து இங்கு வந்து தங்கி இரண்டு குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், செங்கொடி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இது தனது வீடு, நான் இங்கு தான் இருப்பேன் என கூறி, வலுக்கட்டாயமாக தங்கியிருதுள்ளார். மேலும், வீட்டில் இருப்பவர்களிடமும், குழந்தைகள் மற்றும் சின்னதுரையின் சகோதரருடனும் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சின்னதுரையின் அண்ணன் ரத்தினம் என்பவர், குழந்தைகளை பார்க்க வீட்டுக்கு சென்றபோது செங்கொடி, இங்கே யாரும் வரக்கூடாது என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், செங்கொடிக்கும், ரத்தினத்திற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த ரத்தினம், அருகில் கிடந்த கட்டையை எடுத்து செங்கொடியின் தலையில் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த செங்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

image

இதுகுறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செங்கொடியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை செய்த ரத்தினம் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் தானாக சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.