கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன்றத்தலைவராக ராஜேஷ்வரி என்பவரும் துணைத்தலைவராக மோகன் என்பவரும் இருக்கின்றனர். இந்நிலையில், ஊராட்சி மன்றக் கூட்டத்தின்போது , தலைவர் ராஜேஷ்வரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை துணைத்தலைவர் மோகன் தரையில் அமர்த்தியதாக சமூக வலைதளங்களில் நேற்று புகைப்படம் ஒன்று வெளியாகியது.

image

இச்சம்பவம் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த புகார் எழுந்ததும் புவனகிரி காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையில் இந்த சம்பவம் நடந்தது உண்மைதான். ஆனால் தற்போது இதுகுறித்த பதிவு வெளிவர காரணம் என்ன என்பது குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. மேலும், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

image

அதேசமயத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி கூறுகையில், “இதுகுறித்து இதுவரை யாரும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரவில்லை. புகைப்படம் வெளியானதும்தான் விசாரணையை ஆரம்பித்தோம். அந்த நிகழ்வு நடந்தது உண்மை என தெரிய வந்திருக்கிறது. ஊராட்சி செயலாளர் இதுகுறித்து தகவல் அளித்திருக்க வேண்டும். அதனால் அவரை பணியிடைநீக்கம் செய்துள்ளோம். போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.