நெல்லை மாவட்டம் காவல்கிணறு வடக்கன்குளம் சாலையில் 24 மணி நேரமும் ஜல்லி கற்கள் மற்றம் மண் லாரிகள் அதிக அளவில் வந்து செல்லும். இந்த சாலையில், நேற்று ஒரு லாரியில் இருந்து ஜல்லி கற்கள் சிதறி விழுந்து கிடந்தது. இந்த பகுதியில் சிதறி விழுந்த ஜல்லிக் கற்களால் இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் வழுக்கி விழுந்ததில் அவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டது.
இதனைக்கண்ட அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பணகுடி காவல்நிலைய காவலர் ஜெகதீசன், உடனடியாக விபத்துக்கு காரணமான ரோட்டில் சிதறி கிடந்த ஜல்லி கற்களை அருகில் இருந்த வீட்டில் துடைப்பம் வாங்கி சாலையை சுத்தம் செய்தார். இதனை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து காவலர் ஜெகதீசின் தன்னலமற்ற பணியை வெகுவாக பாராட்டினர்.
இதனை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால் அந்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு சென்றது. உடனடியாக அவர், ஜெகதீசன் அழைத்து அவரது சமூகப் பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.