கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள மன்னவனூர் எழும்பள்ளம் ஏரியை குடிமராமத்து செய்ய, தேர்தல் மூலம் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை, மன்னவனூர் கிராமத்தில் உள்ள எழும்பள்ளம் ஏரியை குடிமராமத்து செய்ய, புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் முன்னாள் கோட்டாட்சியர் சுரேந்திரன், திட்ட வரைவு தயார் செய்து அரசுக்கு அனுப்பியதில் 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் ஏரியின் பாசன வசதிபெறும் விவசாயிகள் தலைமையில், உடனடியாக குழு அமைக்கப்பட்டு, குடிமராமத்து பணிகள் துவக்கப்பட்ட நிலையில், குளத்தை தூர்வார அக்கிராம அதிமுகவினர் தலையிட்டு போட்டி குழு துவங்கி, குளத்தை மராமத்து செய்ய முட்டுக்கட்டை போட்டனர்.
இதனால் ஆளும் தரப்பின் மீது அதிருப்தி அடைந்த மன்னவனூர் பொதுமக்கள், உயர்நீதிமன்றத்தை நாடி நீதி கோரினர். அதன் அடிப்படையில், நீதிமன்றம் ஆயக்கட்டு பாசன பயனாளிகளை கொண்டு, பொதுவான தேர்தல் நடத்தி, தலைவரை தேர்ந்தெடுத்து, குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை உதவி ஆட்சியர் முன்னெடுத்து, விரைந்து தேர்தல் நடத்தி, குழு அமைத்து வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர், ஏரியை குடிமராமத்து செய்யவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.