இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாண்ட் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இந்தியா உட்பட 22 நாடுகளில் நடத்திய ஆய்வில் 58 சதவீதம் இளம் பெண்கள் சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
’உலக பெண்கள் அறிக்கை நிலை’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு இந்தியா, பிரேசில், நைஜீரியா,ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 22 நாடுகளில் எடுக்கப்பட்டது. அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம். அதனால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸஅப், டிக்டாக் போன்ற பல்வேறு தளங்களில் ஆன்லைன் துன்புறுத்தலை எதிர்கொண்டதை பெண்கள் ஏற்றுக்கொண்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஐரோப்பாவில் மட்டுமே 63 சதவீதம் பெண்கள் துன்புறுத்துதல்களை பதிவு செய்துள்ளனர். லத்தின் அமெரிக்காவில் 60 சதவீதமும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 58 சதவீதமும், வட அமெரிக்காவில் 52 சதவீத பெண்கள் என்றும் மேலும் ஆய்வு குறிப்பிடுகிறது.
இதில், பாலியல் வன்முறை அச்சுறுத்துதல்கள், இனவெறிக் கருத்துகள், ஆன்லைனில் திட்டுவது போன்றவையும் அடங்கும். குறிப்பாக, 47 சதவீதம் இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். இதில், தன்பால் ஈர்ப்பாளர்கள் அதிகம்பேர் என்பது குறிப்பிடத்தக்கது.