ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதற்கு காரணம் அவரது அணியில் இருக்கும் வலுவான பவுலர்கள் மீதான நம்பிக்கைதான். அத்துடன் முதல் பேட்டிங்கில் ரன்களை குவிக்க அதிரடி பேட்ஸ்மேன்களின் ஆர்டர் இருப்பதால் பேட்டிங் செய்ய தயாராக இருந்தார்.

முதல் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணியில் ரோகித் ஷர்மா மற்றும் குயிண்டான் டி காக் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டத்தொடங்கினர். இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான ஒரு இன்னிங்ஸை கொடுக்கப்போகிறார்கள் எனத் தோன்றியது. அப்போது இளம் வீரர் கார்த்திக் தியாகி, டி காக் விக்கெட்டை வீழ்த்தினார். 15 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருந்த டி காக் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த சூர்யகுமாருடன் ஜோடி சேர்ந்த ரோகித் அதிரடியை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

image

அப்போது ஸ்ரேயாஸ் கோபால் வீசிய 10வது ஓவர் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் ஷர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். 23 பந்துகளில் 35 ரன்களை எடுத்திருந்த அவர் கேட்ச் ஆகினார். இதில் 3 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்த பந்திலேயே இஷான் கிஷண் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆக, மும்பை அணிக்கு நெருக்கடியான சூழல் உருவாகியது. அப்போது குருனல் பாண்ட்யா களமிறக்கப்பட, அவர் சூர்யகுமாருக்கு தட்டிக்கொடுத்து ஆடினார். 17 பந்துகளை சந்தித்த குருனல் 12 ரன்களை மட்டுமே எடுத்துவிட்டு நடையைக்கட்டினார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தது.

image

இதற்கிடையே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் அரை சதம் கடந்தார். 47 பந்துகளில் 79 ரன்களை விளாசிய சூர்யகுமார் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நிலைத்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா தனது பங்கிற்கு 19 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார். மும்பையின் பேட்டிங்கில் ஓப்பனிங், பெரிய ஸ்கோரை எடுப்பதற்கு வசதியாக அமைந்தது. ஒன் டவுன் களமிறங்கிய சூர்யகுமாரின் பேட்டிங் மிகப்பெரும் பலமாக இருந்தது. நடுவுல் இஷான், குருனல் பாண்ட்யா சொதப்பிவிட்டுச் சென்றது சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. கடைசி நேர ஹர்திக்கின் அதிரடி மும்பையின் ஸ்கோரை முழுமை படுத்தியது.

image

ராஜஸ்தானின் பந்துவீச்சில் சரியான பவுலிங் ஆர்டர் இல்லை. தொடக்கத்திலேயே ராஜ்பூட் ரன்களை வாரிக்கொடுத்தது மட்டுமின்றி, கடைசி ஓவரையும் அவரையே வீச வைத்தது வீணான முயற்சி. 3 ஓவர்களுக்கு 42 ரன்களை விட்டுக்கொடுத்த ராஜ்பூட், விக்கெட் எதையும் எடுக்கவில்லை. இளம் வீரர் கார்திக் தியாகி 4 ஓவர்களுக்கு 36 ரன்களை கொடுத்தபோதிலும், முக்கிய விக்கெட்டும், முதல் விக்கெட்டுமான டி காக்கை வீழ்த்தி அசத்தினார். 4 ஓவர்களுக்கு 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்ரேயாஸ் கோபாலின் பந்துவீச்சு பாராட்டுக்குரியது. எப்போதும் ஜொலிக்கும் ஆர்ச்சர் இன்று 4 ஓவர்களில் 34 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியது ராஜஸ்தானுக்கு பலனளிக்கவில்லை.

image

194 ரன்கள் என்ற சவாலான இலக்கை எதிர்த்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அடிசறுக்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அத்துடன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 6 (7) ரன்களிலேயே அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து சிக்ஸர் நாயகன் சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற, ராஜஸ்தான் அணி பெரும் நெருக்கடியில் சிக்கியது. தொடக்கத்தில் களமிறங்கிய ஜாஸ் பட்லர் மட்டும் நிலைத்து நின்று ரன்களை சேர்த்து வந்தார். அரை சதம் கடந்த பின்னர் அதிரடியை தொடங்கிய பட்லர், 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸ் லைனில் கேட்ச் ஆனார். 6 அடிக்கு மேல் உயரம் கொண்ட பொலார்ட் சிக்ஸருக்கு சென்ற பந்தை கேட்ச்சாக மாற்றியிருந்தார். அப்போதே ராஜஸ்தானின் வீழ்ச்சியும் உறுதியானது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 136 ரன்களில் சுருண்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் பேட்டிங்கில் பட்லரைத் தவிர யாருமே அடிக்காதது மைனஸ். பட்லருக்கு யாரேனும் ஒரு பேட்ஸ்மேன் பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அணிக்கு பெரும் இழப்பானது. மிடில் ஆர்டரில் அடிப்பதற்கு வலுவான பேட்ஸ்மேன்கள் இல்லாதது பலவீனம்.

image

மும்பையின் பவுலிங் ஆரம்பமே மிரட்டலாக இருந்தது. தொடக்கத்திலேயே ட்ரெண்ட் போல்ட் மற்றும் பும்ராவிற்கு ஓவர்களை அடுத்தடுத்து கொடுத்து ராஜஸ்தான் விக்கெட்டுகளை கதகச்சிதமாக ரோகித் ஷர்மா சரித்திருந்தார். பும்ராவின் பந்துவீச்சில் அனல் பறந்தது. 4 ஓவர்களுக்கு 20 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் அபாரான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் ட்ரெண்ட் போல்ட் 4 ஓவர்களுக்கு 26 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். மொத்தத்தில் மும்பையின் மிரட்டலான பந்துவீச்சில் பணிந்தது ராஜஸ்தான ராயல்ஸ்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.