அரசு பயணமாக சென்னை வந்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அவர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், “வேளாண் சட்டத்தைக் கொண்டு வந்தது ஒரு நீண்ட கால முயற்சி. விவசாயிகள் பலனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் விவசாயத்தில் சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இனி விளைபொருள்களின் விலையை விவசாயிகளே தீர்மானிக்க முடியும். எந்த நபரிடம் விற்பனை செய்ய வேண்டும் என்பதையும் விவசாயிகளே தீர்மானிக்க முடியும். எந்த மாநிலத்திலும் பொருள்களைக் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும். இதனால் மாநிலங்களில் உள்ள விவசாயச் சந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
நல்ல விலை கிடைக்கக்கூடிய வகையில் எங்கு வேண்டுமானாலும் விளை பொருள்களை விற்பனை செய்யலாம். மாநிலங்களுக்கிடையே விளை பொருள்களை விற்கும் முறை மத்திய அரசிடம்தான் உள்ளது. வேளாண் சட்டத்தில் எந்தவித குழப்பங்களும் இல்லை. அதனால் விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை.
விவசாயிகள் மண்டிகளில் 8- 8.5 சதவிகிதம் வரை கட்டணமாகவும் இடைத்தரகர்களுக்கு வரியாகவும் கட்டிக்கொண்டிருந்தனர். இனி அந்த வரியைக் கட்ட தேவையில்லை. ஏபிஎம்சி சந்தைகளில் பொருள்களை விற்பனை செய்தால், 8.5 சதவிகித வரி செலுத்த வேண்டியுள்ளது. இடைத்தரகர்களுக்கு பணம் வழங்க வேண்டும். வெளியே விற்பனை செய்தால், விவசாயிகள் வரி செலுத்தத் தேவையில்லை. விளைபொருள்களை பெற்றவுடன் ரசீதும் மூன்றில் இரண்டு பங்கு தொகையும் உடனே வழங்க வேண்டும்” என்றார்.