சீர்காழி அருகே உள்ள கொண்டல் கிராமத்தில் வீட்டு வாசலில் விளையாடிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே கிராமத்தை சேர்ந்த சிறுவனை அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மகன் முத்து 17. இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பக்கத்து வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்ததை கவனித்துள்ளார். பின்பு அந்த சிறுமியை அருகிலிருந்த காலி மனைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இதில் காயமடைந்து வலியால் அழுத சிறுமியின் சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனைக்கண்ட முத்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். விபரம் அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் தப்பி ஓடிய சிறுவன் முத்துவை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.