கன்னியாகுமரி அருகே கடலில் மாயமான சிறுவனின் சடலம் இரண்டு நாட்களுக்குப் பின் மீனவர்கள் வலையில் சிக்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் சகாய ராபின். இவரது மகன் 10 வயதான ரோகித் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி அன்று சிறுவன் ரோகித், அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் வீட்டு அருகே உள்ள கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எழுந்து வந்த ராட்சத அலை எதிர்பாராதவிதமாக ரோகித்தை இழுத்துச் சென்றது. இதைக்கண்டு இவரோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அலறினர். இதையடுத்து ஊர் மக்களும், கடலோர காவல் குழுமத்தைச் சேர்ந்த போலீசாரும் விரைந்து வந்து ரோகித்தை மீட்க முயற்சித்த நிலையில், கடல் அலை இழுத்துச் சென்றதால் ரோகித்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று அப்பகுதி மீனவர்கள் வழக்கம்போல் கட்டு மரங்களில் மீன்பிடிக்க சென்றனர். அங்கு உள்ள ஆலயத்தின் கிழக்குப் பக்கம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களது வலையில் ஒரு சிறுவனின் சடலம் சிக்கியது. உடனே மீனவர்கள் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். அது ரோகித்தின் உடல்தான் என அவரது பெற்றோர் அடையாளம் கண்டு உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து மரைன் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.