தமிழ்நாட்டு பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் என்று கன்னியாகுமரி வந்த போலந்து நாட்டை சேர்ந்த இளைஞர் ஆசை தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டை சேர்ந்தவர் 29 வயதான வோய்தேக். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பி.ஹெச். படிப்பு முடித்துள்ளார். போலந்து நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதற்காகவும், தமிழ் மேல் உள்ள ஆர்வத்தால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோவை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயின்று கடின உழைப்பால் தற்போது சரளமாக பேசவும் எழுதவும் கற்றுத் தேர்ந்துள்ளார்.
இந்நிலையில் அவருடன் நண்பர் சுரேஷ் மற்றும் பெண் தோழியுடன் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திற்கு வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் வோய்தேக் கூறுகையில், ‘’போலந்து நாட்டிலுள்ள தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுப்பதற்காக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் வந்தேன். நான் எதிர்பார்த்திருந்ததைவிட விரைவாக தமிழில் பேசவும் எழுதவும் கற்றுகொண்டேன். விரைவில் சொந்த நாட்டிற்கு திரும்புவேன்.
எனக்கு தமிழ் மீதும் காந்தியடிகளின் மீதும் உள்ள அளவு கடந்த அன்பு காரணமாக கன்னியாகுமரி வந்தேன். தமிழ்நாட்டு உணவான தோசை, இட்லி, பொங்கல் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். தமிழ்நாட்டு பெண்களை மிகவும் பிடிக்கும். இங்குள்ள பெண்ணை திருமணம் செய்ய விருப்பம். எதிர்காலத்தில் என்னுடைய விருப்பம் நிறைவேறலாம்’’ என்றார்.