ஐபிஎஸ் அதிகாரி வேலை வாங்கித் தருவதாக, பஞ்சாப் நபரிடம் 3.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொலைக்காட்சி நடிகையும் அவரது கணவரும் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாபின் ஜலந்தரில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கு தொடர்பாக தொலைக்காட்சி நடிகை ஸ்பானா ரல்ஹான்(28) மற்றும் அவரது கணவர் புனீத் கே ரல்ஹான்(26) ஆகியோரை மும்பை காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர்கள் பாஞ்சாபை சேர்ந்த ஒரு நபரிடம் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை வாங்கித்தருவதாக உறுதியளித்து ரூ .3.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அவரை ஜலந்தர் மாவட்டத்திலேயே பதவியில் அமர்த்துவதாகவும் இவர்கள் உறுதியளித்திருந்தனர்.
முதலில் பஞ்சாப் காவல்துறையின் மோசடி தடுப்பு பிரிவு மும்பை காவல்துறையை தொடர்புகொண்டு இந்த தகவல்களை கூறியது. அதனைத்தொடர்ந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் நகரின் ஓஷிவாரா வட்டாரத்தில் உள்ள தம்பதியினரின் குடியிருப்பில் சோதனை நடத்தி அவர்களை கைது செய்தனர். அதன்பிறகு, பஞ்சாப் காவல்துறையினர், குற்றவாளிகளை ஜலந்தருக்கு அழைத்துச் சென்றதாக இன்ஸ்பெக்டர் வினய் கோர்பூட் தெரிவித்தார். விசாரணையின் போது இவர்கள், பாதிக்கப்பட்டவருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தேசிய போலீஸ் அகாடமியின் போலி நியமன கடிதங்களையும் கொடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது.
முதலில் இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதாக புகார் அளித்தவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த ஜோடி மும்பையில் வசிப்பதைக் கண்டறிந்த ஜலந்தர் போலீசார் சிறப்புக் குழுவை நியமித்து, மும்பை போலீஸை தொடர்பு கொண்டு தம்பதியரை கைது செய்தனர்.