கடல்போல் காட்சியளிக்கும் பவானிசாகர் நீர்த்தேக்கம் அணைக்கு வரும் நீரின் அளவும், பாசனத்திற்கு திறந்துவிடும் நீரின் அளவும் சம அளவில் உள்ளதால் 3 நாட்களாக நீர்மட்டம் ஒரே அளவில் இருக்கிறது.image

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதால் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்மட்டம் 99 அடியாக குறைந்தது. இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவின் ஒருசில பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.97 அடியாகவும், நீர் இருப்பு 30.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 3178 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடி நீரும், பவானி ஆற்றில் 850 கனஅடி நீரும் (மொத்தம் 3150 கனஅடி நீர்) வெளியேற்றப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் நீர்த்தேக்க பகுதி கடல்போல் காட்சியளிக்கிறது. அணைக்கு நீர்வரத்து சராசரியாக 3 ஆயிரம் கன அடியாக இருப்பதால் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பும் சம அளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களாக 101.97 அடியாக நீடிக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.