பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணம் இந்திய இசை ரசிகர்களைத் தீரா துயர்கொள்ளச் செய்திருக்கிறது. பலரும் கண்ணீருடன் சமூக வலைதளங்களில் எஸ்.பி.பி-யின் பாடல்களைப் பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்க, ஒருசிலர் எஸ்.பி.பி-யின் மருத்துவக் கட்டணம் குறித்து சர்ச்சையான விஷயங்களைப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் 50 நாள்களுக்கு மேலாக எல்லோரும் காத்துக்கொண்டிருந்தனர் ரசிகர்கள். இதற்கிடையில் அவருக்கு கொரோனா குணமாகிவிட்டதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்தது. மெல்ல மெல்ல நலமடைந்து வருகிறார் என்று அவரின் மகன் சரணும் நமபிக்கை தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், செப்டம்பர் 24-ம் தேதி மாலை எஸ்.பி.பி-யின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை நிர்வாகம். அதைத்தொடர்ந்து எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு நேரில் விரைந்த கமல்ஹாசன் திரும்பிச் செல்லும்போது, `அவர் நலமாக இருக்கிறார் எனச் சொல்ல முடியாது’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அந்தக் கணமே அனைவரின் இதயங்களும் கனத்துப் போயின. அடுத்த சில மணி நேரத்தில், எஸ்.பி.பி இறந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. அதைத் தொடர்ந்து இறந்துவிட்டார் என்பது பொய்யான தகவல் எனப் பதிவுகள் பதிவிடப்பட்டன. என்ன நடந்தது எனப் புரியாமல் ரசிகர்கள் திண்டாடினர். இந்நிலையில், அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 25-ம் தேதி (நேற்று) மதியம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்துவிட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை மையப்படுத்தித்தான் சர்ச்சைப் பதிவுகள் முளைத்துள்ளன.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

சிகிச்சைக்கான முழுக் கட்டணத்தையும் செலுத்தாததால் எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் எஸ்.பி.பி இறந்த செய்தியை வெளியிட மறுத்தது என்றும் எஸ்.பி.பி-யின் மகள் துணை ஜனாதிபதியை அணுகிய பிறகே, மருத்துவமனை நிர்வாகம் எஸ்.பி.பி-யின் உடலை விடுவித்தது என்றும் சமூகவலைதளங்களில் பதிவுகள் பரவியுள்ளன. ஒரு மகத்தான கலைஞனை, மாண்புமிகு மனிதரை இழந்து அவரின் குடும்பத்தினரும் ரசிகர்களும் துயரத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படி வெளியான செய்தி, மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இசையுலகின் ஜாம்பவானுக்கா இப்படியொரு நிலை என்றும் கேள்வியை எழுப்பியது. சமூகவலைதளங்களில் உலவும் இந்தச் செய்தி எந்தளவுக்கு உண்மையானது?

இதுகுறித்து விசாரிக்க எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினரைத் தொடர்புகொண்டோம். எம்.ஜி.எம் மருத்துவமனையின் மீடியா இன்சார்ஜ் வசந்த் நம்மிடம், “இது 100 சதவிகிதம் பொய்யான தகவல். எங்கள் மருத்துவமனைக்கு களங்கத்தை ஏற்படுத்த நினைக்கும் யாரோ இப்படியெல்லாம் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். அவ்வளவு பெரிய மனிதர் விஷயத்தில் நாங்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்வோமா என யோசித்துப் பாருங்கள். அப்படி ஏதேனும் நடந்திருந்தால் எஸ்.பி.பி.சரண் நேற்றே அறிக்கை விட்டிருக்க மாட்டாரா? எனவே, அந்தத் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்றவர், “25-ம் தேதி மதியம் 1.04 மணிக்குத்தான் எஸ்.பி.பி சார் மரணமடைந்தார். அதற்கான எல்லா ஆவணங்களும் எங்களிடம் இருக்கின்றன. எஸ்.பி.பி.சரணுக்கு எல்லா தகவல்களும் தெரியும்” என்றார்.

எஸ்.பி.பி.சரண் தரப்பில் பேச முயன்றோம்… அவரின் உதவியாளர் பிரகாஷ் நம்மிடம், “மருத்துவக் கட்டணம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் பொய்” என்பதுடன் முடித்துக்கொண்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.