ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 6வது போட்டி பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 26 (20) ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் போல்ட் ஆனார். அவரைத்தொடர்ந்து வந்த நிகோலஸ் பூரான் 17 (18) ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். இதற்கிடையே அதிரடியாக விளையாடி கே.எல்.ராகுல் சதம் அடித்தார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத கே.எல்.ராகுல் 132 (69) ரன்களை விளாசினார். பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய துபே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, 207 ரன்கள் என்ற இமால இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 4 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் சரிந்தன. கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்தப் போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய படிக்கல் இந்தப் போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 30, டிவில்லியர்ஸ் 28, பின்ச் 20 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பெங்களூரு அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் பிஸ்னோவ், முருகன் அஸ்வின் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். காட்ரெல் இரண்டு விக்கெட் சாய்த்தார்.

பஞ்சாப் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.