மூன்றாம்கட்ட சோதனையில் சுமார் 25,000 – 30,000 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியை பரிசோதிக்கவும் பாரத் பயோடெக் திட்டமிட்டுள்ளது
தற்போது பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது. ஏற்கனவே முதலாம் கட்ட சோதனைகளை முடித்து, அதன் தரவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (டி.சி.ஜி.ஐ) சமர்ப்பித்துள்ளது பாரத் பயோடெக்.
”இப்போது ஹைதராபாத்தில் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளுடன் மூன்றாம்கட்ட தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இந்த இரண்டு கட்ட சோதனைகளின் தற்போதைய திறன் 100-200 மில்லியன் டோஸ் ஆகும். தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்கள் மூலம் சில நிறுவனங்களுடன் இணைந்து கோவாக்சின் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது ” என்று பாரத் பயோடெக்கின் தர இயக்கங்களின் தலைவர் சாய் பிரசாத் கூறினார்.
மேலும் இந்நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 4-5 நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறது. ஆண்டுக்கு குறைந்தது 1 பில்லியன் கோவாக்சின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.