ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் நேற்று பஞ்சாப் – பெங்களூரு அணிகள் மோதின. அப்போது முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 69 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். கே.எல்.ராகுலின் பேட்டிங்கின்போது அவருடைய இரண்டு கேட்ச்களை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தவறவிட்டார். கோலியின் இந்த ஃபீல்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அந்த நேரத்தில் போட்டி தொடர்பாக வர்ணனை செய்துகொண்டிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், “ஊரடங்கு காலத்தில் அனுஷ்கா சர்மாவின் பௌலிங்கில் மட்டும்தான் கோலி பயிற்சி செய்துள்ளார். அந்த வீடியோவை நான் பார்த்தேன், அது மட்டும் அவருக்கு போதாது என நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
அவரது கருத்து கோலியின் ரசிகர்களைக் கடுப்பாக்கியுள்ளது. `கோலியின் தவறுக்கு அனுஷ்கா சர்மாவை ஏன் குறிப்பிட்டுப் பேச வேண்டும்’ என்று ஒரு தரப்பினரும் `அனுஷ்காவால்தான் கோலி சரியாக விளையாடவில்லை’ என மற்றொரு தரப்பினரும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். அனுஷ்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் கவாஸ்கரை வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரலும் ஒலித்து வருகிறது.
Also Read: `அமைதியா இருக்கேன் பலவீனமா இல்ல’ – ட்விட்டரில் லெப்ட் ரைட் வாங்கிய அனுஷ்கா ஷர்மா!
இந்நிலையில் கவாஸ்கரின் கருத்துக்கு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா. அதில், “கவாஸ்கர், உங்கள் கருத்து வெறுக்கத்தக்கது. ஆனால், கணவரின் விளையாட்டுக்காக ஏன் மனைவி மீது இத்தகைய கடுமையான கருத்தை வெளியிட நினைத்தீர்கள் என்பதை நான் விளக்க விரும்புகிறேன். கடந்த சில வருடங்களாக நீங்கள் வர்ணனை செய்யும்போது அனைத்து கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மீதும் மரியாதை வைத்திருந்தீர்கள். அதே அளவு மரியாதை எங்கள் மீதும் வைக்க வேண்டும் என உங்களுக்குத் தெரியவில்லையா?
என் கணவரின் விளையாட்டைப் பற்றி விமர்சிக்க உங்களின் மனதில் பல வார்த்தைகள் தோன்றியிருக்கும் என எனக்குத் தெரியும். அப்படியிருக்கையில் என் பெயரை உபயோகித்தால்தான் உங்கள் கருத்து பொருத்தமானதாக இருக்குமா? இப்போது 2020 நடக்கிறது. ஆனால், இன்னும் எனக்கு நடக்கும் விஷயங்கள் எதுவும் மாறவில்லை. எப்போது என்னை கிரிக்கெட்டில் இழுப்பது நிறுத்தப்படும்?” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா லாக்டௌன் நேரத்தில் அவர்களது வீட்டில் அனுஷ்கா பௌலிங்கில் கோலி பேட்டிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுஷ்காவின் விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள கவாஸ்கர், “என்னுடைய கமென்ட்ரியில் எங்கே அனுஷ்காவை குறை கூறியுள்ளேன்? நான் ஒன்றும் அவரைக் குறைகூறவில்லை. அந்த வீடியோவில் அவர் விராட்டுக்குப் பௌலிங் செய்துள்ளார் என்று மட்டுமே சொன்னேன். லாக்டௌன் நேரத்தில் விராட் அந்த பௌலிங்கை மட்டும்தான் விளையாடியுள்ளார். அது, டென்னிஸ் பந்தை வைத்து, மக்கள் பொழுதைப் போக்குவதற்காக விளையாடக்கூடிய விளையாட்டு. அதைத் தவிர விராட்டுடைய தோல்விகளுக்கு அனுஷ்காவைக் குறை சொல்வதுபோல் நான் என்ன சொல்லியுள்ளேன்?” என்று பதிலளித்துள்ளார்.