தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டம் சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், டெல்லி மக்களவை பாதுகாப்புப் பணியில் பணிபுரியும் ஏ.டி.ஜி.பி சந்தீப் மிட்டலை தமிழகக் காவல்துறையில் முக்கியப் பொறுப்பில் நியமிக்க உளவுத்துறை பரிந்துரை செய்திருக்கிறதாம். 1995 பேட்ச் தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சந்தீப் மிட்டல், சைபர் செக்யூரிட்டியில் நிபுணத்துவம் பெற்றவர். இம்மாதத்துடன் டெல்லி அயல்பணி முடிந்து தமிழக கேடருக்கு திரும்பவுள்ள சந்தீப் மிட்டல், 2021 தேர்தல் சமயத்தில் முக்கியப் பங்காற்றுவார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநில உளவுத்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்கள் திட்டமிட்டு கட்டமைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். அரசு என்ன திட்டம் கொண்டு வந்தாலும், அதை நிராகரிக்கும்படி மக்களைத் தூண்டிவிடுவது, அரசுக்கு எதிரான மனநிலையை செயற்கையாக உருவாக்குவது என ஒரு சிலர் சமூக வலைதளங்களில் செயல்படுவதாகவும் முதல்வருக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அளித்திருந்தது. அவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை சைபர் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற சந்தீப் மிட்டலிடம் ஒப்படைக்கலாம் என உளவுத்துறை முதல்வருக்கு பரிந்துரைத்திருக்கிறது. சைபர் க்ரைம் பிரிவுக்கு அவர் ஏ.டி.ஜி.பி-யாக நியமிக்கப்படலாம்.” என்றனர்.
Also Read: `வேளாண் மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்!’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan
சந்தீப் மிட்டலுக்கு இன்னும் எட்டரை ஆண்டுகள் பணிக்காலம் உள்ளது. தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், சந்தீப் மிட்டல் மூலமாக சில அரசியல் அதிர்வுகள் ஏற்படலாம் என்பதுதான் ஐ.பி.எஸ் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.