கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஊரடங்கில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் தளர்வுகள் வந்துவிட்டாலும், இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. மறுபுறம் நாட்டின் பொருளாதாரமும் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால், மத்திய, மாநில அரசுகள் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
Also Read: வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு… பல்கலைக்கழகம் உத்தரவு!
இந்தக் காலகட்டத்தில் விவசாயிகளும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மத்திய அரசுடன் இணைந்து விவசாயம் சார்ந்த உற்பத்திப் பொருள்களை விற்பதற்காக அக்ரி ஸ்டோர் அமைக்க இருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 100 அக்ரி ஸ்டோர்களும் நாடு முழுவதும் 25,000 அக்ரி ஸ்டோர்கள் திறக்க மத்திய வேளாண் அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் பின் தங்கியவர்கள், வேளாண் பட்டதாரிகள் ஆகியோர் மூலம், வேளாண் பொருள்களை உற்பத்தி செய்வதுடன், அதை சந்தைப்படுத்துவது ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று சொல்லப்படுகிறது.
அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதுதொடர்பாக, பல்கலைக்கழக வட்டாரங்களில் விசாரித்தபோது, “இதுகுறித்து முழுமையான விபரம் எங்களுக்குத் தெரியாது. துணைவேந்தரிடம் தான் கேட்க வேண்டும்” என்றனர். தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமாரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “அக்ரி ஸ்டோர் தொடர்பான பரிந்துரை ஒன்றை மத்திய அரசு கேட்டது. அதைக் கொடுத்துள்ளோம்.
ஆனால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது என்பது குறித்த அதிகாரபூர்வ அரசாணை எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள், மாநில அரசு மூலம் தொடர்பு கொள்வார்களா, இல்லை நேரடியாக எங்களிடம் வருகிறார்களா என்றும் தெரியவில்லை. அரசாணை கிடைத்தால்தான் அதுகுறித்து முழுமையாகப் பேச முடியும்” என்றார்.