ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிட்-19 தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்துள்ளது. இதன் மூன்றாவது கட்ட பரிசோதனை மகாராஷ்டிராவிலுள்ள சசூன் பொது மருத்துவமனையில் தொடங்குகிறது.
“இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். இப்போது 150 முதல் 200 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசியின் அளவை வழங்குவோம்” என்று சசூன் பொது மருத்துவமனையின் டீன் டாக்டர் முரளிதர் தம்பே தெரிவித்தார். ஏற்கெனவே இத்தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை பாரதி வித்யாபீத் மருத்துவக் கல்லூரி மற்றும் கே.இ.எம் மருத்துவமனையில் நடந்தன.
கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பதற்காக சீரம் நிறுவனம், பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது, இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில், சீரம் நிறுவனம் நாட்டில் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை இடைநிறுத்தியது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) செப்டம்பர் 11 ம் தேதி, தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மருத்துவ பரிசோதனையில் எந்தவொரு புதிய பரிசோதனைகளையும் நிறுத்தி வைக்குமாறு எஸ்ஐஐக்கு உத்தரவிட்டது. இருப்பினும், செப்டம்பர் 15 ஆம் தேதி, தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை மீண்டும் தொடங்க எஸ்.ஐ.ஐ.க்கு டி.சி.ஜி.ஐ அனுமதி அளித்துள்ளது.