மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த காவலரை நெல்லை மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணல் திருட்டிற்கு உடந்தையாக காவல்துறை அதிகாரிகள் யாரும் செயல்பட்டால் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் லட்சுமி நாராயணன், மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு வந்ததால் உடனே அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதுபோன்று மணல் கடத்தலுக்கு உதவியாக காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் செயல்பட்டால் பணியிடை நீக்கம் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.