நீச்சல் குளம் அருகே தூங்கிக்கொண்டிருந்த நபர் திடீரென கரடியைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் பகுதியில் உள்ள நீச்சல் குளம் ஒன்றின் அருகேயுள்ள இருக்கையில், மேத்தீவ் பீட் என்பவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது நீச்சல் குளத்திற்கு வெளியே உள்ள பகுதியில் அலைந்து கொண்டிருந்த கரடி ஒன்று, தாகம் ஏற்பட்டு நீச்சல் குளத்தின் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்தது. பின்னர் நீச்சல் குளத்தில் தேவையான அளவிற்கு அந்தக் கரடி தண்ணீர் பருகியது.
அதைத்தொடர்ந்து அங்கும் இங்குமாய் திரிந்த கரடி, உறங்கிக்கொண்டிருந்த மேத்தீவ் அருகே சென்று, அவரது காலை வருடியது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மேத்தீவ், கரடியின் வருடலால் மெல்ல கண் விழித்தார். அப்போது கரடியைக் கண்ட அவர் அதிர்ச்சியுடன் பதறினார். அவரின் பதற்றத்தை கண்ட கரடி அங்கிருந்து தலை தெறிக்க ஓடியது. உடனே மேத்தீவ் தனது செல்போனில் கரடியை படம்பிடித்தார். இந்த வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது.