உப்பிலியபுரம் அருகே உள்ள சிறுநாவலூரில் குலதெய்வ வழிபாட்டின் போது தோரணவெடி வெடித்ததில் 7 வயது சிறுவன் பலி. போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை பரமத்தி வேலூர் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

image

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் பெரியார் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவர் ஹைதராபாத்தில் மத்திய ரிசர்வ் படையில் காவலராக வேலைபார்த்து வருகிறார். தற்போது விடுப்பில் வந்துள்ள இவர், தனது குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள சிறுநாவலூரில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளனர்.

அப்போது அங்கு தோரணவெடி வெடிக்கப்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக வெடி ஒன்று சிதறி லோகநாதனின் மகன் சசிதரனின் மீது விழுந்து வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவனை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சசிதரன் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் அப்பகுதியிலுள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் சொந்த ஊரான பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூருக்கு சிறுவனின் உடலை அடக்கம் செய்ய கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த முசிறி காவல்கண்காணிப்பாளர் பிரம்மானந்தன் தலைமையிலான போலீசார் பரமத்திவேலூர் போலீசார் உதவியுடன் பொத்தனூருக்கு சென்று சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் சிறுவனின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.