தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.4 லட்சத்தை இழந்த பொறியியல் மாணவர் கால்வாயில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 வயதான நிதீஷ் எனும் பொறியியல் மாணவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததை அடுத்து, வியாழக்கிழமை இரவு கரீம்நகர் மாவட்டம் ககாதியா கால்வாயில் நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். வியாழக்கிழமை இரவு காணாமல் போன இந்த இளைஞனை வெள்ளிக்கிழமை காலை கால்வாயில் உள்ளூர் மீனவர்கள் சடலமாக கண்டுபிடித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
வியாழக்கிழமை இரவு கால்வாயின் அருகே கிடந்த நிதீஷின் மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களை பைக்கின் பதிவு எண்ணின் உதவியுடன் கண்டுபிடித்தனர், பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகித்து மாணவரின் குடும்ப உறுப்பினர்கள் கால்வாய்க்கு வந்தனர். அதன்பிறகு அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், 21 வயதான பிரிதம் ஹால்டர் என்ற ஐ.டி.ஐ மாணவர், தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாட முடியாததால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்டார். செப்டம்பர் 6 ஆம் தேதி நாடியா மாவட்டத்தில் சக்தா காவல் நிலைய எல்லைக்குள் பூர்பா லால்பூர் வட்டாரத்தில் உள்ள அவரது வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் காணப்பட்டார்.