வங்கிகளில் அல்லது ஏடிஎம்களில் பிராந்திய மொழிகள் உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்” மத்திய அரசின் நிதி அமைச்சரகத்திலிருந்து வங்கிகளில் அல்லது ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. நாங்கள் பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறோம். எனவே அவ்வாறு பிறப்பிக்கும் எண்ணமோ/நோக்கமோ இல்லை. எங்கேனும் இடையூறு ஏற்பட்டால் தெரிவிக்கவும். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா “வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பிராந்திய மொழிகள் அகற்றப்படுவதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், உடனடியாக நிலைமையை மீட்டெடுக்க வலியுறுத்துகிறோம்” என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.