கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் முடக்கப்பட்டன.
5 மாத முடக்கத்திற்குப்பின் தற்போது ஒவ்வொரு துறைக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை இ-பாஸ் நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டாலும் நீலகிரி போன்ற கோடை வாசஸ்தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் நடைமுறையில் உள்ளது.
சுற்றுலா வருவாயைச் சார்ந்துள்ள மாவட்டம் நீலகிரி. கடந்த 5 மாதங்களாக லாக்டெளன் காரணமாக நீலகிரியில் எந்தவிதமான வியாபாரமோ, பணப்புழக்கமோ இல்லை.
வணிகர்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரிவோர், சுற்றுலா வாகன ஓட்டுநர் எனப் பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர்.
Also Read: கொரோனாவால் களையிழந்த திருச்செந்தூர் ஆவணித் திருவிழா… ரத்து செய்யப்பட்ட தேரோட்டம்!
தற்போது நாடு முழுவதும் அன்லாக் செயல்முறைகள் அமலில் உள்ள நிலையில், சுற்றுலாவுக்கும் எப்போது தளர்வுகள் அளிக்கப்படும் என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது.
வருகின்றன புதன் கிழமை (09.09.2020) முதல் நீலகிரியில் உள்ள பூங்காக்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் நீலகிரி இ-பாஸ் விண்ணப்பத்தில் சுற்றுலாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
“மக்களின் வேண்டுகோளை ஏற்று, ஆலோசனை மேற்கொண்டோம். இதன் அடிப்படையில் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
தற்போதுவரை இ-பாஸ் முறையில் அத்தியாவசிய பணி மற்றும் தொழில் நிமித்தமாக மட்டுமே அனுமதித்தோம். தற்போது இ- பாஸில் சுற்றுலாவையும் சேர்த்துள்ளோம். ஆனால் இ-பாஸ் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். விண்ணப்பத்தின் அடிப்படையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுவர்.
சுற்றுலா இ-பாஸுடன் நீலகிரிக்குள் வரும் பயணிகளைத் தங்கும் விடுதிகளும் அனுமதிக்கும். மேலும் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களும் வருகின்ற புதன் கிழமை முதல் திறக்கப்படும்.
சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் அளவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம். மக்கள் பாதுகாப்பான முறையில் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அறிவித்திருக்கிறார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.