கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த சில வாரங்களில் துபாயில் ஆரம்பமாக உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான துவக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் சென்னையில் பயிற்சியை முடித்துக் கொண்டு துபாய் கிளம்பியது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. துபாயில் சென்னை அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவி பணியாளர்களிடத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இரண்டு வீரர்கள் உட்பட மொத்தமாக 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனை பி.சி.சி.ஐ -யும் உறுதி செய்த நிலையில் சென்னை அணி வீரர்கள் பதினைந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் பிறகே அவர்களால் பயிற்சி மேற்கொள்ள முடியுமென்ற நிலை உருவாகியுள்ளது.
ஐ.பி.எல் தொடரின் வழக்கப்படி முந்தைய சீசனில் இறுதி போட்டியில் விளையாடிய அணிகள் தான் அடுத்த சீசனுக்கான முதல் போட்டியை விளையாடும்.
இதனால் 19 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள ஐ.பி.எல் தொடரில் 2019 ஐ.பி.எல் சாம்பியனான மும்பை அணியும், இரண்டாவது இடமும் பிடித்துள்ள சென்னை அணியும் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை அணி துவக்க போட்டியில் ஆடாத பட்சத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துவக்க போட்டியில் மும்பை உடன் ஆடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.