திருக்குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் பிரதமருக்கு இருப்பதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கூறியுள்ளார்.
டெல்லியில் முரளிதரராவ் தலைமையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். விழாவில் பேசிய அவர் இறைமாட்சி அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள
“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு”
என்றத் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசத்தொடங்கினார். குறளை படித்து முடித்த அண்ணாமலை குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இருப்பதாக கூறினார்.
மேலும் கட்சியில் ஒரு தொண்டனாக சேர்ந்திருக்கும் நான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை என்றும் கட்சி சார்பில் எடுக்கும் எவ்வகையான முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என்றும் கூறினார். மேலும் கட்சியை வலுப்படுத்த என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.